| 0 Kommentare ]


தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்யவும். இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம். பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். நகத்துக்கு டார்க் கலர் பொலிஷ் போடுவதால் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பொலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பொலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம். பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் நிறைந்து விட்டால் நல்லெண்ணெயை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். . நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.